tamilnadu

img

தமிழ் வாழ்க! மார்க்சியம் வாழ்க!!

புதுதில்லி, ஜுன் 18- தமிழ் வாழ்க, மார்க்சியம் வாழ்க, உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் பி. ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர் செவ்வாயன்று பதவியேற்றுக் கொண்டனர். 17ஆவது மக்களவைக் கூட்டத் தொட ரின் இரண்டாவது நாளான செவ்வாயன்று தமி ழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதவி யேற்றுக் கொண்டனர். அவர்கள் அனைவரும் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 17ஆவது மக்களவையின் கூட்டத் தொடர் திங்களன்று தொடங்கியது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் பாதிப் பேர் திங்களன்று பதவியேற்றுக் கொண்டனர். இரண்டாவது நாள் கூட்டத்தின் போது மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவியேற்றனர். செவ்வாயன்று ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங் களைச் சேர்ந்த உறுப்பினர்கள், இடைக் கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலை யில் பதவியேற்றனர். புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கமும் பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழி ஏற்றனர். பதவியேற்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோயம்புத்தூர் மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்று முழக்கமிட்டு அவைக்கு வணக்கம் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பின் நிறைவாக, “தமிழ் வாழ்க! மார்க்சியம் வாழ்க!!” என்று முழக்கமிட்டு அவைக்கு வணக்கம் தெரிவித்தார்.

இந்தக் காட்சிகள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள இடதுசாரி தோழர்  களுக்கு உற்சாகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்துவதாக அமைந்தன. முன்னதாக திமுக எம்.பி.க்களான தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி  தங்கப்பாண்டியன் ஆகியோர் தமிழ் வாழ்க என்று மக்களவையில் முழக்கமிட்டனர். டி.ஆர்.பாலு பதவியேற்று முடித்தவுடன் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிஷங்கர் பிரசாத், ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோ ரிடம் கைகுலுக்கிவிட்டுச் சென்றார். கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி செல்லகுமார் பதவியேற்கச் செல்லும் முன்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை நோக்கி வணங்கிவிட்டுச் சென்றார். பதவி யேற்பு நிகழ்விற்கு தருமபுரி எம்.பி செந்தில் குமார் கறுப்புச் சட்டை அணிந்துவந்திருந் தார். திராவிடம் வெல்க, கலைஞரின் புகழ்  ஓங்குக என்று கூறி அவர் பதவிப் பிர மாணத்தை முடித்தார்.

ஆரணி காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத்,  கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பதவியேற்கை யில், கடவுள் மீது உறுதிகூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  சிதம்பரம் தொகுதி எம்.பி தொல். திருமாவளவன் பதவியேற்று முடிக்கையில், வாழ்க அம்பேத்கர், பெரியார், வெல்க ஜன நாயகம், சமத்துவம் என்று கூறினார். அப் போது ஆளுங்கட்சி தரப்பினர் வந்தே மாதரம் போல்கே என்று இந்தியில் முழக்கமிட்டனர். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது. ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி, தமிழ்நாடே என் தாய்நாடு, தாய்நாட்டின் உரிமை காப்போம் என்று கூறி உறுதிமொழி எடுத்தார். திருப்பூர் சிபிஐ உறுப்பினர் சுப்பராயன் பதவி யேற்கும் போது லாங் லிவ் செக்குலரிசம், லாங்  லிவ் இந்தியா மதச்சார்பின்மை நீடூழி வாழ்க;  இந்தியா நீடுழி வாழ்க! என்று கூறினார். அப் போதும் அங்கிருந்த உறுப்பினர்களிடையே கூச்சல், குழப்பம் எழுந்தது. தேனி அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பதவியேற்கும்போது, வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், வாழ்க அம்மா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று கூறினார். அப்போது பாஜக உறுப்பினர்கள் அனைவரும் மேசையை தட்டினர். அவருக்கு தயாநிதி மாறன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி எம்.பி கனிமொழி வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என்று கூறி பதவியேற்றார்.

பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முக சுந்தரம் பதவியேற்ற போது, தமிழ் வாழ்க என்று மூன்று முறை முழக்கமிட்டார். அப்போது பாஜக எம்.பி.க்கள் பாரத் மாதா கீ ஜே என்று முழங்கினர். அவர்களைத் தொடர்ந்து திமுக எம்.பி. ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உள்ளிட்டோர் பதவியேற்றனர். இதை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பாஜகவின் மேனகா காந்தி ஆகியோர் எம்.பி.க்களாக பொறுப்பேற்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பால் தொகுதி எம்.பியாக பொறுப்பேற்ற சமாஜ்வாதி கட்சியின் சஃபிகுர் ரஹ்மான், வந்தே மாதரம் கூற மறுத்ததால், சலசலப்பு ஏற்பட்டது. அவரைத் தொடர்ந்து மதுராவின் எம்.பி. யாக பதவியேற்ற நடிகை ஹேம மாலினி, பதவிப் பிரமாணத்தின் முடிவில் ராதே ராதே, கிருஷ்ணன் வந்தே, ஜகத் குரு என்று கூறிய தால் அவையில் சிரிப்பலை எழுந்தது.